சோம்பலை உதறி விடு சொர்க்கத்தைத் தொட்டு விடு !
சோம்பலை உதறி எறிந்து விட்டு இங்கே வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் !
சோம்பலை உதறிவிடு, சொர்க்கத்தைத் தொட்டு விடு ! எனும் தலைப்பு மனதுக்குள் பல்வேறு சிந்தனைகளை எழுப்பியது !
சோர்வு வந்து சேரும் முன்பே ஓய்வெடுக்கத் துடிக்கும் மனநிலையைத் தான் சோம்பல் என்று சொல்வார்கள். சோம்பல் ஒரு தற்காலிக சுகம் !
ஆனால் அது ஒரு நீண்டகாலத் துயரம் !
படுக்கையிலே புரண்டு படுத்து,
எழும்ப வேண்டுமெனும் மனதை தடுத்து,
இன்னும் கொஞ்சம் இளைப்பாறுவோம் என்பதில் சோம்பல் தொடங்குகிறது !
பாடங்களை சற்றே ஒதுக்கி
இமைகளை சற்றே இறக்கி
கடமையைக் கொஞ்சம் பதுக்கி வைக்கும் இடத்தில் சோம்பல் தொடருகிறது !
சோம்பல் !
நாளைய தோல்விகளுக்காக இன்று நாம் நடத்தும் ஒத்திகை !
சோம்பலின் வால் பிடித்துக் கிடப்பவர்கள் எப்போதுமே வெற்றியின் தோள் தொட்டு நடப்பதில்லை !
சோம்பல் வெற்றியின் எதிரி !
ஓடி ஓடிக் களைத்து விட்டேனென காற்று சோம்பல் பட்டால் பூமி வாழுமா ?
நடந்து நடந்து கால் வலிக்கிறதென நதிகள் நின்று விட்டால் தண்ணீர் கிடைக்குமா ?
சுட்டது போதும் ஒருமாதம் விடுப்பில் போகிறேன் என சூரியன் சொன்னால் பச்சையம் தயாரிக்க பயிர்கள் எங்கே போகும் !
ஐம்பூதங்கள் சோம்பல் கொண்டால் பூமிப் பந்து அழிந்து விடும் ! அவை சுறுசுறுப்பாய் இயங்குகின்றனர்.
அதே போல, ஐம்புலன்கள் சோம்பல் கொண்டால் உடல் அழிந்து விடும்.
நுகர்ந்தது போதுமென நாசி நிறுத்துவதில்லை !
உணர்ந்தது போதுமென மெய்யது சொல்வதில்லை !
எனில்
நாம் மட்டும் ஏன் சோம்பலைச் சுற்றிக்கொண்டு திரிய வேண்டும் ?
சோம்பல் ஒரு புதைகுழி !
காலை வைத்தால் ஆளை விழுங்கும் புதைகுழி.
சோம்பல் ஒரு காட்டுத் தீ
எத்தனை போட்டாலும் திருப்திப் படாத காட்டுத் தீ !
எனவே தான் சோம்பல் வாழ்வுக்கு எதிரியாய் இருக்கிறது !
சுறுசுறுப்பு வெற்றிக்கு நண்பனாய் இருக்கிறது.
இயற்கை நமக்கு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தருகிறது. உயிரினங்கள் நமக்கு சுறுசுறுப்பின் பாடத்தைக் கற்றுத் தருகின்றன. மனிதர்கள் மட்டுமே சோம்பலின் படுக்கையில் சோம்பிக் கிடக்கின்றனர்.
சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்; அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள் .. என்கிறது பைபிள். வாழ்க்கையின் வெற்றி சுறுசுறுப்பின் கைகளில் இருக்கிறது. அதைக் கற்றுக் கொள்ள ஒரு எறும்பின் முன்னால் கூட மண்டியிடத் தயாராய் இருக்க வேண்டும்.
சோம்பல் என்பது ஒரு நோய்.. என்கிறது பிரிட்டனில் நடந்த ஆய்வு ஒன்று. பிற நோய்களைப் போலவே உடலையும், மனதையும் சோம்பல் அழிக்கிறது. சோம்பல் கொண்ட உடலில் நோயாளியின் உடலைப் போன்ற தன்மை இருப்பதாய் அந்த ஆய்வு கூறுகிறது !
மாணவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக, ஒரு தேனீயைப் போல இருக்க வேண்டும்.
சுறுசுறுப்பான உடலே சுறுசுறுப்பான மனதில் அடிப்படைத் தேவை. உடல் சோர்வாக இருக்கும் போது மூளைக்குத் தேவையான உயிர்வழி கிடைப்பதில்லை. எனவே அது சோர்வடைகிறது. மூளையின் சோர்வு படிப்பைப் பாதிக்கும். எனவே தான் மாணவர்கள் சுறுசுறுப்பாய் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தேங்கிக் கிடக்கும் நீரில் தான் கொசு உற்பத்தியாகும் !
ஓடிக்கொண்டே இருக்கும் நீரில் ஆரோக்கியம் தங்கும் !
வெற்றியாளர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து தங்கள் இலட்சியத்தை நோக்கி உற்சாக நடை போட்டவர்களாகவே இருப்பார்கள். அதனால் தான் அவர்களுடைய வாழ்க்கை வெற்றியின் சிம்மாசனங்களில் இருக்கிறது ! அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து சுறுசுறுப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும்
சோம்பல் என்பதும் ஓய்வு என்பதும் வேறு. உடலுக்குத் தேவையான தூக்கத்தை இரவில் கொடுக்க வேண்டியது கட்டாயம். அது சோம்பல் அல்ல !
அந்த நேரத்தை டிஜிடல் கருவிகளில் தொலைத்து விடக் கூடாது. அவை நமது வாழ்க்கையை நோயின் வாசலுக்குள் துரத்திவிடும். அது தான் தவறு.
தினமும் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் எனும் துடிப்பு உடையவர்களையும்,
அடுத்து ஏதாவது சாதிக்க வேண்டும் எனும் ஆர்வம் உடையவர்களையும் சோம்பல் பிடித்துக் கொள்ளாது !
சோம்பல் என்பது விக்கிரமாதித்ய வேதாளம் போன்றது ! தோளில் தொற்றிக் கொண்டால் விட்டு விடாது !
சோம்பல் என்பது சாத்தானைப் போன்றது ! பிடித்துக் கொண்டால் அழித்து விடும்.
எனவே சுறுசுறுப்பானவர்களை நண்பர்களாகக் கொண்டிருக்க வேண்டும்.
அல்லது நமது நண்பர்களை சுறு சுறுப்பானவர்களாக நாம் மாற்ற வேண்டும்.
நமது வீணான நேரங்களில் நல்ல பொழுது போக்குகளை, கலைகளைக் கற்கவேண்டும்.
அது நமது நேரத்தைச் சாம்பலாக்கும் சோம்பலை விரட்டி ;
நேரத்தை ஆனந்தத்தின் ஆம்பலாய் மலரவைக்கும் !
“சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்” என்கிறது நீதிமொழிகள்.
பயிர்செய்யும் காலத்தில் சோம்பல் பட்டால் அறுவடை காலத்தில் அழுகை சுரக்கும்.
படிக்கும் காலத்தில் சோம்பல் பட்டால் எதிர்காலம் இனிமை இழக்கும்.
இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை என்பது பிரபலமான பழமொழிகளில் ஒன்று !
சோம்பலின் பாதை
வெற்றியின் வீட்டில் போய்ச் சேராது !
சொர்க்கத்தின் வாசல் சோம்பல் கொள்பவர்களுக்கானதல்ல !
அது உற்சாகத்தின் பிள்ளைகளுக்கானது !
எனவே சோம்பலை களைவோம் !
சுறுசுறுப்பை அணிவோம்
என்று கூறி விடைபெறுகிறேன்
நன்றி
வணக்கம்