Posted in Solomon's Proverb

சாலமோனின் நீதிமொழிகள் : PART 1

Image result for solomon Proverb

ஆண்டவன் மீதான
அச்சமே,
அற்புத ஞானத்தின்
ஆரம்பம்.

பெற்றோரிடம் உள்ளது.
அறிவின் முதல் படி.
தவறாமல்
அதைக் கடைபிடி.

அதுவே,
உன்
தலையை அலங்கரிக்கும்
தங்கக் கிரீடம்,
கழுத்தைத் தழுவும்
பவழ மாலை.

தீயவர்களின் வார்த்தைகளுக்கு
வானவில் போல
ஏராளம் வண்ணங்கள்.

அப்பாவிகளைக்
கொள்ளையடிப்பதும்,
பாதாளச் சமாதிக்குள்
வேதாளங்களாய் சுற்றி வருவதும்,
யாரையேனும் அழித்து
அந்த
செல்வம் சுருட்டி
மிரட்டும் மாளிகை கட்டுவதும்,
என,
கொடியவன் வார்த்தைகளில்
இனிப்பு விஷ‌ம்
கனியும்.

நீ,
அவர்களோடு செல்லாதே.

பறவைக்கான கண்ணி
அதன்
பார்வை படாத இடத்தில்
பதுங்கி இருக்கும்.
தீயோருக்கான
தீர்ப்பும் அப்படியே.

உன்
வியர்வை தொடாத
பணம் உன்னை
விழுங்கும்.

இகழ்ச்சி செய்வதில்
மகிழ்ச்சி கொள்தல்
இன்னும் எத்தனை நாளைக்கு ?

அறிவின் விளக்கை
அணைத்து,
முட்டாள் தன
முட்டுக்கட்டைகளில்
முத்தமிடுவது
இன்னும் எத்தனை நாளைக்கு ?

உங்கள்
தர்ப்பெருமை உங்களை
தகர்க்கும்,
சூழ்ச்சி உங்களை
சிதைக்கும்.

விறகாகிப் போன மரத்தில்
வட்டமிட்டுத்
தேன் தேடும் வண்டாய்
காலம் கடந்த தேடல்கள்
கவனிப்பாரின்றி கலையும்.

அறிவின் கடலை
நிராகரிப்போரை
பின்
அனுதாப
அலைகள் கூட வருடாது.

Posted in Solomon's Proverb

சாலமோனின் நீதிமொழிகள் : PART 2

Image result for wisdom

உணவுக்கான ஓடுதலோடு
உணர்வுக்கான
தேடுதலையும் வளர்த்துக் கொள்.
மெய்யறிவுக்காய்
மன்றாடு.

சுரங்கம் தோண்டி
புதையல் தேடும்
ஆர்வத்தை
ஞானம் தோண்டுவதில்
நடத்து.

அறிவும், ஞானமும்
ஆண்டவன் அருள்வதே.
மாசற்றோனுக்கான
கேடயம்
கடவுளே.

அவருடைய
வரைபடத்தில் வருபவை
எல்லாம்
நேர்மையின் பாதைகளே.

நீதியையும்,
நேர்மையையும்
நீ பற்றிக் கொள்.
ஞானம் வந்து
உன்னைத் தொற்றிக் கொள்ளும்.

பின்,
உன் நுண்ணறிவும்
மெய்யறிவும்,
உன் வழியை உருவாக்கும்.

உன்
நிழல் விழும் ஓரமும்
நீதியின் கரமாய் இருக்கும்.

உதடுகளில்
தேன் வடிக்கும்,
தேள் போன்ற
விலைமகளிடமிருந்து
உன்னைத் தப்புவிக்கும்.

அவள் உதடுகள்
வெள்ளைப்பூக்களில் வாழும்
வண்ணத்துப் பூச்சிபோல
வம்புக்கிழுக்கும்,

அதில் மயங்கினாலோ,
சிற்றின்பச் சூறாவளி
தென்றலென தீண்டி,
உன் செல்வத்தைச் சிதைக்கும்
சூறாவளியாகும்,
உன் உயிரை உருக்கும்
உருக்காலையாகும்.

இருபுறமும் கூராள
வாள் போல உனை
வெட்டிச் சாய்க்கும்.

சுடுகாட்டுப் பாதை போல
அவள் வீட்டுக்கான பாதையும்
ஓர்
ஒற்றையடிப்பாதையே !.
வாழ்வுக்கான மாற்றுவழி
அந்த
வாசலுக்குள் வருவதில்லை !

அவள் வீட்டு
முற்றத்தில்
அழிவின் ஆசனங்கள் மட்டுமே
அணிவகுத்து நிற்கும்.

நீ
நல்லவற்றைத் தேர்ந்தெடு.
முளைகள் வந்தபின் தான்
களைகள் விதைத்த
கவலை வரும்.

உன் நீர்த்தொட்டியில்
நல்ல நீர் உள்ளது,
உன் கிணறுகளில்
பரிசுத்த ஊற்று இருக்கிறது,
அதைப் பருகு.

உன் ஊற்று நீர்
ஊருக்கான ஆற்று நீரில்
கலக்கவேண்டாம் ?
உன் வாய்க்கால் நீர்
வயலைத் தாண்டி
வழிந்தோட வேண்டாம்.

உன் முற்றம் முழுதும்
வாசனை நிரப்பும்
உரிமைப் பூ ஒன்று
அருகிருக்கையில்,
தெருவோரக் கள்ளியோடென்ன
பருவப் போராட்டம் ?

உன் வீட்டு முற்றத்தில்
நட்சத்திரப் புள்ளிமான்
விளையாடும் போது,
கானகத்து நரிகளோடு
காலம் கழிப்பதெதற்கு ?

இதயத்தை அடக்கு
ஆண்டவனில் அடங்கு.
அப்போது
அறிவு உன் அகத்துக்கு
அணிகலனாகும்.

Posted in Solomon's Proverb

சாலமோனின் நீதிமொழிகள் : PART 3

Image result for honest

அறிவைத் தேடுதலே
அறிவு.
ஞானம் தேடுதலே
உண்மை ஞானம்.

அதை நீ
உயர்வாய் கொள்
உன்னை அது
உயர்த்தும்.
வேண்டாமென்போரை அது
தீண்டாது.

நேரிய பாதை
உன்னை இடறாது,
ஏனென்றால்
உன் நடையில்
தெளிவுகள் இருக்கும்.

சறுக்காத பாதை அது
ஏனெனில்
நீ
வெறுக்காத ஞானம் அது.

தீயவர்களோ,
தீவினை உண்டு
கொடுஞ்செயல் குடித்து
இருட்டின் மடியில்
குருடாய் கிடக்கிறார்கள்.

அவர்கள் கண்களை
வைகறை
உறுத்தும்.

நல்லோருக்கோ
வைகறை
மெல்ல மெல்ல விரிந்து
நண்பகல் நோக்கி
நடக்கும்.

உன் கோட்டைகளை
காவல் செய்வது இருக்கட்டும்,
உன்
இதயத்தை முதலில்
காவல் செய்.

உன் வாயில்
அழிவின் நாகங்கள்
படமெடுக்க வேண்டாம்.
அன்பின் வார்த்தைகள்
புடமிடட்டும்.

நாணயமற்ற பேச்சுகளோ
வஞ்சக வார்த்தைகளோ
கொஞ்சமும் உன்னில்
மிஞ்சவேண்டாம்.

நேர் பார்வையோடு
நேர் வழியில் செல்,
வலப்புறமும்
இடப்புறமும்
இருக்கையோடு காத்திருக்கும்
தீமைகளை
பார்வையாலும் தீண்டாதே.

Posted in Solomon's Proverb

சாலமோனின் நீதிமொழிகள் : PART 4

Image result for solomon

நீ,
யார் கடனுக்கோ
பொறுப்பேற்றிருந்தாலோ,

அன்னியனுக்காய்
பிணையாய் நின்றால்,

அவனை
வருந்தி வேண்ட
வருந்தாதே.

வலைகளில் சிக்கிய
மான்,
புரண்டு படுத்து துயிலாது,
பொறியில் சிக்கிய கிளி
கண் மூடி
கனா காணாது.

நீ
விடுவிக்கப் படும் வரை
போராடு.
உன் ஞானம் உன் மேலான
இக்கட்டுகளின் கட்டுகளை
வெட்டிப் போடும்.

சோம்பேறிகளாய்
சொக்கித் திரியாதீர்கள்.

தலைவனோ,
கண்காணிப்பாளனோ,
அதிகாரியோ இல்லாத
எறும்புகளை
பொறுமையாய் பாருங்கள்.

கோடையில் சேமிக்கிறது
பசியால்
வாடையில் உண்கிறது.

இன்னும் என்ன தூக்கம் ?
உங்கள்
இமைகளின்
இன்னும் என்ன நங்கூரத்தின்
கொக்கிகள் ?

திறவுங்கள்,
படுக்கை என்பது பாடையல்ல.

தொடர்ந்து தூங்கினால்,
வறுமை உன்மேல்
வழிப்பறிக் கொள்ளையனாய்
கொடூரமாய் பாயும்,

ஏழ்மை
உங்கள் எல்லைகளை
போர்ப்படையாய்
கைப்பற்றும்.

ஆண்டவன் வெறுக்கும்
காரியங்கள்
ஆறு.

இறுமாப்புள்ள பார்வை
அது
கழுத்திறுக்கும் போர்வை.

பொய்யுரைக்கும் நாவு
அது
உயிர் கொய்யும் தீவு.

நீதி கொல்லும் கை
அது
பாதி கொல்லும் உன்னை.

தீங்கிழைக்க ஓடும் கால்
அது
தீக்குழியாய் உனை தொடும்.

பொய்யுரைக்கும் சான்று
அது
மெய்யழிக்கும் நின்று.

தீய எண்ண உள்ளம்
அது
வீழ வைக்கும் பள்ளம்.

சண்டை மூட்டும் செயல்
அது
தொண்டை வெட்டும் வாள்.

காட்டாறு கரைபுரண்டால்
பள்ளங்கள் நிலைக்காது.
கட்டளைகள் நிலைபுரண்டால்
உள்ளங்கள் வெளுக்காது.

பெற்றோரின் கட்டளைகளை
சுவாசமாய் இழு,
உன் கழுத்துகளில் அவை
மாலையாய் விழும்.

கட்டளைகள் உனக்கான
விளக்கு.
அறிவுரைகள் அதையேற்றும்
ஒளி,
அது மட்டுமே வாழ்வின் வழி.