ஆண்டவன் மீதான
அச்சமே,
அற்புத ஞானத்தின்
ஆரம்பம்.
பெற்றோரிடம் உள்ளது.
அறிவின் முதல் படி.
தவறாமல்
அதைக் கடைபிடி.
அதுவே,
உன்
தலையை அலங்கரிக்கும்
தங்கக் கிரீடம்,
கழுத்தைத் தழுவும்
பவழ மாலை.
தீயவர்களின் வார்த்தைகளுக்கு
வானவில் போல
ஏராளம் வண்ணங்கள்.
அப்பாவிகளைக்
கொள்ளையடிப்பதும்,
பாதாளச் சமாதிக்குள்
வேதாளங்களாய் சுற்றி வருவதும்,
யாரையேனும் அழித்து
அந்த
செல்வம் சுருட்டி
மிரட்டும் மாளிகை கட்டுவதும்,
என,
கொடியவன் வார்த்தைகளில்
இனிப்பு விஷம்
கனியும்.
நீ,
அவர்களோடு செல்லாதே.
பறவைக்கான கண்ணி
அதன்
பார்வை படாத இடத்தில்
பதுங்கி இருக்கும்.
தீயோருக்கான
தீர்ப்பும் அப்படியே.
உன்
வியர்வை தொடாத
பணம் உன்னை
விழுங்கும்.
இகழ்ச்சி செய்வதில்
மகிழ்ச்சி கொள்தல்
இன்னும் எத்தனை நாளைக்கு ?
அறிவின் விளக்கை
அணைத்து,
முட்டாள் தன
முட்டுக்கட்டைகளில்
முத்தமிடுவது
இன்னும் எத்தனை நாளைக்கு ?
உங்கள்
தர்ப்பெருமை உங்களை
தகர்க்கும்,
சூழ்ச்சி உங்களை
சிதைக்கும்.
விறகாகிப் போன மரத்தில்
வட்டமிட்டுத்
தேன் தேடும் வண்டாய்
காலம் கடந்த தேடல்கள்
கவனிப்பாரின்றி கலையும்.
அறிவின் கடலை
நிராகரிப்போரை
பின்
அனுதாப
அலைகள் கூட வருடாது.