Posted in Life of JESUS

இயேசு வரலாறு 13 : போ.. உனது மகன் பிழைப்பான்

Image result for jesus heals son of army

இயேசு சமாரியாவை விட்டு கலிலேயாவை நோக்கி நடந்தார் நண்பர்களுடன். நாசரேத்துக்கு சற்று தொலைவில் அவரும் சீடர்களும் தங்கினார்கள். இயேசு வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட மக்கள் அவரிடம் வந்து உரையாடினார்கள். கானா வில் அவர் நிகழ்த்தியிருந்த அதிசயத்தைப் பற்றிய செய்தி அருகிலுள்ள ஊர்களுக்கும் பரவியிருந்தது. எனவே அவரை மக்கள் ஒரு ஆச்சரியங்கள் செய்யும் மந்திரவாதி போல பார்த்தார்கள். அவரை சந்தித்தால் இன்னும் ஏதேனும் நல்ல பொழுது போக்கு கிடைக்கும் என்னும் எண்ணம் சிலருக்கு, தங்களுடைய குறைகள் தீரும் என்னும் எண்ணம் சிலருக்கு, யார் இந்த இயேசு என்பதைப் பார்த்து விடும் ஆர்வம் வேறு சிலருக்கு. இப்படி கூட்டம் இயேசுவைச் சூழ்ந்தது.

அதே நேரத்தில் கப்பர் நாகூமில், ஒரு அரச அலுவலர் இருந்தார். அவருடைய மகன் மிகவும் நோயுற்றிருந்தான். தன் மகனை இழந்து விடுவோமோ என்னும் கவலையில் ஆழ்ந்திருந்தார் தந்தை. ஏராளமான செல்வங்களைக் கொண்டிருந்த அவரிடம் தன்னுடைய மகனின் நோயைத் தீர்க்கும் மருத்துவர் அமையவில்லையே என்னும் பதட்டமும், சோகமும் நிறைந்திருந்தது. அவருடைய பணியாளன் அவரிடம் வந்து

‘தலைவரே.. போதகர் இயேசு கானா அருகே தங்கியிருக்கிறாராம். இப்போதைய சூழ்நிலையில் அவரிடம் சென்று உம்முடைய மகனுடைய சுகத்துக்காக வேண்டலாமே’ என்று பணிவாய்ச் சொன்னான்.

‘இயேசு இங்கே வந்திருக்கிறாரா ? கானாவில் திருமண வீட்டில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினாரே.. அந்த இயேசுவைத் தானே சொல்கிறாய் ?’

‘ஆம் தலைவரே. அவரே தான்’

‘அப்படியா ! ஆனால் அவரை நான் பார்த்ததில்லையே ? எப்படிக் கண்டுபிடிப்பது ?’ அரச அலுவலர் கண்களில் கொஞ்சம் நம்பிக்கை ஒளி மின்னியது.

‘அது மிகவும் எளிது என்று தான் நினைக்கிறேன். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அதை வைத்தே அவரைக் கண்டு பிடித்துவிடலாம். அதுமட்டுமன்றி அங்கே எல்லோருக்கும் அவரைத் தெரிந்திருக்கும் எனவே அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கும் என்று தோன்றவில்லை. நான் போய் உமது மகனின் நோயைத் தீர்க்குமாறு வேண்டவா ?’ பணியாளன் கேட்டான்.

‘வேண்டாம் வேண்டாம். நானே நேரடியாகச் சென்று அவரிடம் மன்றாடுகிறேன்’ சொன்னவர் வீட்டினுள் சென்று மகனைப் பார்த்தார். அவன் மரணத்துக்கும், வாழ்வுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அவருடைய கண்கள் கலங்கின. இதயம் உடைந்தது. உடனே இயேசுவைச் சந்திக்க விரைந்தார்.

இரண்டு நாள் பயணித்து இயேசு தங்கியிருந்த இடத்தைச் சென்றடைந்தார். இயேசு அங்கே சீடர்களின் கூட்டத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். இயேசுவின் போதனைகளைக் கேட்க ஏழைகள், வறியவர்கள், பிச்சையெடுப்பவர்கள் உட்பட ஏராளமானோர் கூடியிருந்தனர். இயேசு மக்களுக்குத் தெரிந்திருந்த சட்ட நூலில் உள்ளவற்றின் உண்மை அர்த்தங்களைப் போதித்துக் கொண்டிருந்தார். காலம் காலமாக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருந்த நீதி நூல்களின் உண்மை விளக்கங்களை இயேசு சொல்ல மக்கள் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். இயேசுவை அடையாளம் கண்டு கொள்ள அரச அலுவலருக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஓடிச் சென்று அவருடைய பாதங்களில் பணிந்தார்.

‘போதகரே… எனக்கு உதவுங்கள்’ அவர் கதறினார். இயேசு பார்த்தார். பணக்காரத் தனத்தின் மொத்த உருவமாக தன் முன்னால் வந்து நின்ற அவரைப் பார்த்துக் கேட்டார்.

‘என்ன வேண்டும் ? நீங்கள் யார் ?’

‘நான் கப்பர்நகூமிலிருந்து வருகிறேன். என்னுடைய மகன் நோய்வாய்ப் பட்டிருக்கிறான். எந்த மருத்துவராலும் அவனைக் குணப்படுத்த முடியவில்லை. நீர் தான் அவனைக் குணப்படுத்த வேண்டும்’ அவர் கண்ணீருடன் விண்ணப்பித்தார்.

‘என்னால் உம் மகனைக் குணப்படுத்த முடியும் என்று எப்படிச் சொல்கிறீர் ?’ இயேசு கேட்டார்.

‘போதகரே. நீர் தண்ணீரை திராட்சை இரசமாக்கிய அதிசயத்தை நான் அறிவேன். மருத்துவர்கள் கைவிட்ட என் மகன் ஏதேனும் அதிசயத்தால் தான் பிழைக்க முடியும். எனவே வாரும். வந்து என் மகனைப் பிழைக்க வையும்’ அவர் கண்கள் நில்லாமல் வழிந்தன.

‘நீங்கள் என்னுடைய போதனைகளை வைத்து என்னை நம்புவதில்லை. நீங்கள் நம்பவேண்டுமென்றால் அதிசயங்களும், அற்புதங்களும் நடக்க வேண்டும்’ இயேசு பொறுமையாய்ச் சொன்னார்.

தன்னுடைய பதட்டத்தைக் கணக்கில் கொள்ளாமல் இயேசு இப்படி பொறுமையாய் இருக்கிறாரே என்று கவலைப்பட்டார் அரச அலுவலர்.

‘போதகரே.. விரைவாய் வாரும். கப்பர் நகூமுக்குச் செல்லவே இரண்டு நாட்கள் ஆகும். விரைவாய்ப் போவோம். இல்லையேல் என் மகன் இறந்து விடக் கூடும்’ அவர் அவசரப் படுத்தினார்.

இயேசு அவனைப் பார்த்தார்.

‘இப்போது மணி என்னவாகிறது ?’

‘பிற்பகல் ஒரு மணி’

‘இந்த நேரம் முதல் உம்முடைய மகன் சுகமாய் இருப்பான். கவலைப்படாமல் செல்லுங்கள்’ இயேசு சொன்னார். அந்த வார்த்தைகளை அப்படியே நம்பிய அலுவலர் இயேசுவிடமிருந்து விடைபெற்று தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டார். சீடர்களும் கூடியிருந்த கூட்டத்தினரும் ஸ்தம்பித்தனர். அவர்களுக்கு நடப்பது எதுவும் விளங்கவில்லை. இதுவரை அவர்கள் நோயாளியை சந்தித்து எண்ணை பூசி குணப்படுத்துவதைத் தான் அறிந்திருந்தார்கள். ஒரு வார்த்தை சொல்லியே குணப்படுத்த முடியுமா என்னும் ஐயம் அவர்களை ஆட்கொண்டது. ஆனாலும் யாரும் இயேசுவை எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை. இயேசுவின் மீது அவர்களுக்கு ஒரு பயம் கலந்த பணிவு தோன்றியது. தங்களையும் ஏதேனும் சபித்து விடுவாரோ என்று கூட கூட்டத்தினர் கருதியிருக்கக் கூடும்.

மறுநாள். வழியிலேயே பணியாளன் அரச அலுவலரை எதிர்கொண்டு ஓடி வந்தான். பணியாளனைக் கண்ட அலுவலரின் உள்ளம் பதறியது.

‘என்ன ஆச்சு ? ஏன் பதட்டமாய் ஓடி வருகிறாய் ?’ தன் மகனுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதோ என்னும் கவலை அவரைப் பிடித்து உலுக்கியது.

‘பதட்டம் இல்லை தலைவரே… பரவசம். உம்முடைய மகன் நலமடைந்து விட்டான்’

அரச அலுவலரின் உள்ளம் ஆனந்தத்தால் துள்ளியது. ‘ எ…என்ன ? என் மகன் நலமடைந்து விட்டானா ? உண்மையாகவா சொல்கிறாய் ? ‘ அவர் ஆனந்த மிகுதியால் கத்தினார். குதிரையிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். பணியாளரை அப்படியே கட்டிக் கொண்டு ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். பணியாளன் பரவசமானான்.

‘தலைவரே. உமது மகன் நேற்று திடீரென்று எழுந்து நடந்தார். உணவருந்தினார். நோயில் கிடந்தவரைப் போலவே இல்லை. தூங்கி எழுந்தவர் போல இருக்கிறார்’ பணியாளனும் ஆனந்தத்தைப் பகிர்ந்தான்.

‘சரி.. எப்போது நலமடைந்தான் ?’

‘நேற்றைக்குத் தலைவரே. நான் அவருடைய படுக்கையருகே தான் இருந்தேன்’ பணியாளன் சொன்னான்.

‘நேற்றைக்கு எத்தனை மணிக்கு சுகமடைந்தான் என்று தெரியுமா ? ‘

பணியாளன் வினாடி நேரமும் தாமதியாமல் சொன்னான்.

‘ஒரு மணிக்கு’

அலுவலர் உடனே தரையில் மண்டியிட்டு கடவுளைப் புகழ்ந்தார். இயேசுவின் வார்த்தைகளினால் தன் மகன் குணம்பெற்றிருக்கிறான் என்பதை அவர் முழுமையாக நம்பினார். இயேசுவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே வீட்டை நோக்கி விரைந்தார்.

அந்தச் செய்தி காட்டுத் தீ போல சட்டென்று பரவியது. ஊர்கள் தோறும் இயேசுவின் கானா திருமண திராட்சை ரச அதிசயமும், அலுவலர் மகன் குணமான அற்புதமும் நிறுத்தாமல் பேசப்பட்டன. இயேசுவின் பேச்சைக் கேட்க ஏராளமான ஆட்கள் குவிந்தனர். ஆலயங்களுக்கும் இயேசு அழைக்கப்பட்டார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...