Posted in Life of JESUS

இயேசு வரலாறு 11 : மாற்றான் மனைவியை அபகரித்தல் பாவம் – யோவான்

Image result for John the baptist warns

இறைவாக்கினர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். அவர்கள் நீதி என்று தங்களுக்குப் படுவதை எந்த சபையிலும் எடுத்துரைக்கத் தயங்குவதில்லை. யோவான் இறைவாக்கினரும் இதற்கு சற்றும் விதிவிலக்கல்ல. அந்நாட்களில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், ஆலய குருக்கள் அனைவருக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். அத்துடன் நின்று விடவில்லை. அவருடைய குரல் அரசவையிலும் எதிரொலித்தது.

கலிலேயாவை ஆண்டு வந்த மன்னன் ஏரோது அந்திபாஸ், இயேசு குழந்தையாய் இருந்தபோது குழந்தைகளைக் கொல்ல சட்டம் இயற்றிய ஏரோது மன்னனின் மகன். அவனுடைய ஆட்சி நியாயமானதாக இருக்கவில்லை. அவன் ஏழைகளை பலவகைகளில் ஒடுக்கியும் நியாயத்தை இருட்டடிப்பு செய்தும் வாழ்ந்து வந்தான். அத்துடன் நிற்கவில்லை, தன்னுடைய சகோதரன் பிலிப்பின் மனைவி மேல் ஆசைப்பட்டு அவளைத் தன்னுடன் வைத்திருந்தான். மக்கள் யாரும் ஏரோது மன்னனின் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியவில்லை. அப்படிக் குரல் கொடுத்தால் மரணம் நிச்சயம் என்பதை எல்லோரும் அறிந்து வைத்திருந்தார்கள்.

யோவான் இறைவாக்கினர் உயிருக்குப் பயப்படவில்லை. அவர் நேராக மன்னனின் முன்னால் சென்று நின்றார்.

‘அரசே… நியாயமான வழிகளில் நடக்காதவன் அழிவுக்கு உள்ளாவான். நீ உன்னுடைய தவறான வழிகளை விட்டு விலகி விடு’ யோவான் நேரடியாக எச்சரித்தார்.

‘நீ யாரிடம் பேசுகிறாய் தெரியுமா ?’

‘வழி தவறிப்போன ஒரு தலைவரிடம் பேசுகிறேன்’

‘நான் ஒரு அரசன். என்னுடைய அவையில் வந்து நின்று என்னையே எதிர்க்க உனக்கு என்ன துணிச்சல்’ ஏரோது மன்னன் கர்ஜித்தான்.

‘துணிச்சல் மனிதனால் வருவதல்ல. உன் துணிச்சல் உன் அதிகாரத்தினால் வருகிறது. என் துணிச்சலோ கடவுளால் வருகிறது. எனவே உன் துணிச்சலை விட என் துணிச்சல் மேலானது. அது அழிவுறாது’ யோவான் தயங்காமல் சொன்னார்.

‘இத்தனை துணிச்சலோடு என்ன பேச வந்திருக்கிறாய் ?’

‘நீ மோகத்தின் வால் பிடித்துக் கொண்டு உன்னுடைய சகோதரனின் மனைவியை உன்னுடைய வைப்பாட்டியாக்கி வைத்திருக்கிறாயே ! அதைத் தான் சுட்டிக் காட்ட வந்தேன்’ யோவான் சொன்னார்.

‘அவளுடைய விருப்பத்துடன் தான் அவளுடன் வாழ்க்கை நடத்துகிறேன்’ ஏரோது சொன்னான்.

யோவான் சிரித்தார். ‘ விருப்பம் ! அது மனித விருப்பம். கடவுளின் சட்டம் என்ன சொல்கிறது என்று தெரியாதா ? சாக்குப் போக்கு சொல்வதில் எந்தப் பயனும் இல்லை’ யோவான் நகைத்தார்.

ஏரோது மன்னன் திருமுழுக்கு யோவானைப் பற்றி அறிந்திருந்தான். தான் செய்வது தவறு என்றும் யோவான் சொல்வதில் பிழை ஒன்றும் இல்லை என்றும் அவனுக்குத் தெரிந்திருந்தது. யோவானுடைய தினசரிப் போதனைகள் ஏரோதின் காதுக்கு வந்து கொண்டே தான் இருந்தன. அவை சரியானவை என்றும் ஒருவேளை அவர் கடவுளின் தீர்க்கத்தரிசியாக இருக்கலாம் என்னும் பயமும் ஏரோதை பயமுறுத்தின.

ஆனால் அவனுடைய ஆசை மனைவியோ, தன்னைப் பற்றி இப்படி எச்சரிக்கையும் சாபமும் விட்டுக் கொண்டிருக்கும் யோவான் சாக வேண்டும் என்று கொதித்தாள். ஆசை நாயகியின் விருப்பங்களுக்குத் தடை ஏது ? நியாயத்தையும் நீதியையும் போதித்துக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவான் சிறையிலடைக்கப் பட்டார்.

யோவானைச் சிறையிலடைத்தபின்னும் ஏரோதியாளின் கோபம் அடங்கவில்லை. ஒரு சாதாரண மனிதன் அரச நிலையில் இருக்கும் தன்னை இழித்துரைப்பதா என்று ஆத்திரமடைந்தாள். சரியான நேரம் வரும்போது யோவானைப் பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...