Posted in Life of JESUS

இயேசு வரலாறு 10 : இயேசுவின் பணித்தளம்

Image result for Jesus with disciples

சில நாட்களில் இயேசு தன்னுடைய ஐந்து சீடர்களையும் அழைத்துக் கொண்டு கப்பர்நாகும் என்னும் ஊருக்கு வந்தார். கலிலேயா ஏரியின் அருகே கம்பீரமாய் இருந்தது கப்பர்நாகும் நகரம். சுமார் பதினைந்து மைல் தூர ஏரிக்கரையில் இருந்த கப்பர்நாகும் அனைத்து விதமான மக்களையும் உள்ளடக்கிய ஒரு இடம் என்று கூட சொல்லலாம். வணிகர்களையும், ஏழைகளையும், பணக்காரர்களையும் கிழக்கிலும், மேற்கிலுமிருந்து ஏராளம் மக்கள் வந்து செல்லும் இடமாக இருந்தது அது. பேதுருவின் மாமியாரின் இல்லமும் அங்கே தான் இருந்தது.

கப்பர்நாகும் அக்காலத்தில் ஏரிகளின் ராணி என்று அழைக்கப்பட்டது. கலிலேயாவின் மிக முக்கியமான ஒரு நகரம் அது. சுமார் பதினைந்து மைல் நீளத்தில் விரிந்திருந்த அந்த ஏரியின் கரை பல நகரங்களை இணைத்து அழகுடன் கம்பீரமாக இருந்தது. ஏரிகளுக்கு முதுகு காட்டி நடந்தால் பச்சையும், மலைகளும் என இயற்கை அழகின் இன்னோர் பக்கம் அங்கே இருந்தது. பேதுரு அந்த ஏரிகளின் ஒவ்வோர் பகுதியையும் மிகவும் தெளிவாக அறிந்தவர். அங்கே தான் அவருடைய படகு மீன்களைத் தேடி அங்கும் இங்கும் அலையும். பேதுரு இயேசுவுக்கு கப்பர்நாகும் நகரைப் பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் விளக்கினார். மீனவர்களின் வாழ்க்கையையும், அன்றாட வாழ்க்கை முறைகளையும் அவர் விளக்கினார்.

கப்பர்நாகும் நகர் இயேசுவை மிகவும் கவர்ந்தது. அழகான ஏரியும், பலதரப்பட்ட மனிதர்களும், மலை வெளிகளும் என கப்பர் நகூமில் தன்னுடைய போதனைகளுக்கான தளம் இருப்பதை இயேசு கண்டு கொண்டார். கப்பர்நாகும் நகரை தன்னுடைய போதனைகளின் தலைமையிடமாக்க வேண்டும் என்பதை அப்போதே அவர் உறுதி செய்து கொண்டார். ஆனால் இன்னும் எதைப் பற்றிய தெளிவும் சீடர்களிடம் இல்லை. முதலில் சீடர்களுக்குத் தன்னுடைய பணியை விளக்க வேண்டும். என்ன செய்யப் போகிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஒத்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகே பணிக்குள் செல்ல வேண்டும் என்பதே இயேசுவின் திட்டமாக இருந்தது.

கப்பர்நாகூமை இயேசு போதனைகளுக்கான இடமாகத் தெரிந்து கொண்டதற்கு இன்னும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும், அது மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வருபவர்களுக்கான ஒரு சந்திப்பு ஊராகவும் இருந்தது. பல நாடுகளிலிருந்தும் வரும் வணிகர்கள் மூலமாக தன்னுடைய போதனைகள் பல இடங்களுக்கும் பயணிக்க முடியும் என்பதையும் இயேசு கணித்திருக்கக் கூடும்.

முதலில் சீடர்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், பிறகு அவர்களுக்கு மனித நேயம் பற்றியும், தற்போதைய யூத மதப் போதனைகளில் ஒளிந்திருக்கும் மனித விரோத சிந்தனைகள் பற்றியும் விளக்கவேண்டும் என்று இயேசு முடிவெடுத்தார். இயேசு அவர்களுடன் சகஜமாகப் பழகி அவர்களுக்குத் தன்னுடைய சிந்தனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் திருமுழுக்கு யோவான் அரசுக்கு எச்சரிக்கை அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஏரோது மன்னன் மோவாய் தேய்த்து யோசித்துக் கொண்டிருக்கையில் அவனுடைய மனைவி எப்படியேனும் யோவானைக் கொல்லுங்கள் என்று நச்சரித்தாள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...