Posted in Life of JESUS

இயேசு வரலாறு 7 : மூன்று சோதனைப் பேய்கள்

Image result for jesus tempted in the desert

யோவானிடம் திருமுழுக்குப் பெற்ற இயேசு தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பித்தார். பணிவாழ்வைத் துவங்கும் முன் அவர் பாலை நிலத்திற்குச் சென்றார். முப்பது ஆண்டுகாலம் பெற்றோருக்குப் பணிந்திருந்து அவர்களுடைய பணிகளில் உதவியாய் இருந்த இயேசு வானகத் தந்தையான கடவுளிடம் வேண்டுவதை மட்டும் எப்போதும் நிறுத்தியதில்லை. அதுவும் தனிமையில் அமைதியான இடத்தில் அமர்ந்து வேண்டுவது அவருக்கு மிகவும் பிடித்தமான செயல். செபம் செய்வதை ஒரு மிகப் பெரிய தியானம் போல செய்வது இயேசுவின் வழக்கம். இந்தமுறையும் இயேசு தனிமையாக செபிக்கச் சென்றார். இந்தமுறை அவருக்கு மிக முக்கியமான விஷயங்களுக்காகக் கடவுளிடம் உரையாடவேண்டியிருந்தது. எனவே அவர் சற்றுத் தொலைவில் ஆள்நடமாட்டம் அறவே இல்லாத பாலை நிலத்தில் ஒரு தனிமையான இடத்தைக் கண்டுபிடித்து கடவுளோடு உரையாடி செபம் செய்யத் துவங்கினார்.

தன்னுடைய பணிவாழ்வை எப்படித் துவங்குவது ? எங்கே துவங்குவது என்று அவருக்குள் கேள்விகள் நிறைய இருந்தன. அமைதியாகக் கண்களை மூடி, கடவுளோடு ஒன்றிக்கத் துவங்கிய இயேசுவிற்கு நேரம் போவதே தெரியவில்லை. ஏன் நாட்கள் போவது கூடத் தெரியவில்லை. நாட்கள் வாரங்களாகி, மாதமாகி நாற்பது நாட்கள் அவர் கடவுளுடன் ஒன்றித்திருந்தார். நாற்பதாவது நாள் முடிவுற்றபோது இயேவுவை சோர்வு வந்து தொற்றிக் கொண்டது. நாற்பது நாட்களாக கடவுளுடன் ஒன்றித்திருந்தபோது தோன்றாத பசியும் சோர்வும் அவரை சட்டென்று வந்து பிடித்துக் கொண்டன. அவருக்குள் ஒரு சஞ்சலம் உருவானது. அந்த சஞ்சலச் சாத்தான் அவருக்கு முன்பாக வந்து குதித்தான்.

‘இயேசுவே… நான் வியக்கிறேன். நீண்ட நெடிய நாற்பது நாட்கள் கடவுளோடு உரையாடி, செய்யவேண்டிய செயல்களைப் பற்றியெல்லாம் முடிவெடுத்து விட்டீர்கள். நல்லது. நீர் அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்யும் வல்லமையையும் கடவுள் உம்மிடம் கொடுத்திருக்கிறார். அப்படித்தானே ?’

‘ஆம். நான் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றித் தெளிவடைந்து விட்டேன். இறைவல்லமையை நிறைவாகப் பெற்றுவிட்டேன்’

‘அப்படியானால் இன்னும் ஏன் பசியால் வாடிக் கொண்டிருக்கிறீர் ? ஏதேனும் உண்ணவேண்டியது தானே ?’

‘உண்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை’

‘அதிசயங்களைச் செய்யும் வல்லமையைக் கையில் வைத்துக் கொண்டு இதென்ன தேவையற்ற பேச்சு ? நீர் நினைத்தால் உணவு வரும். இதோ இந்த வெண்கற்களைக் கூட நீர் நினைத்தால் இப்போது அப்பமாக மாற்றி உண்ணலாமே ?’

‘அற்புதங்களை நான் என்னுடைய சுய விருப்பத்துக்காக வீணடிப்பதில்லை. நான் செய்ய வந்திருப்பது சொகுசுப் பணியல்ல. கடினமான பணி. சோதனைகளைத் தாங்கும் வல்லமை எனக்கு இருக்கிறது’

‘உடம்பில் வலு இருந்தால் தானே உம்மால் பணி செய்ய முடியும் ? இப்போதைக்கு இந்த கற்களை அப்பமாக்கி உண்டு கொள். அதன் பின் மற்றதைப் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்’

‘மனிதன் உயிர்வாழ்வது அப்பத்தினால் மட்டுமல்ல. கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றினாலும் உயிர் வாழ்வான். என்று மறை நூல் சொல்லியிருக்கிறதே. நான் இப்போது இந்த கற்களை அப்பமாக்கி உண்ணாமலிருந்தாலும் இறந்து விடமாட்டேன். எனக்குள் கடவுளின் வார்த்தை இருக்கிறது’ இயேசு சஞ்சலப் பேயை அடக்கினார்.

அதன்பின் இயேசு எருசலேம் தேவாலயத்துக்குத் திரும்பினார். ஆலயத்தின் உயர்ந்த பகுதி ஒன்றில் போய் நின்று சுற்றிலும் பார்த்தார். தான் பணி செய்யவேண்டிய பகுதிகளை அவருடைய கண்கள் பார்த்தன. தான் கடவுளின் வல்லமையுடன் வந்திருக்கும் அவருடைய மகன் என்னும் பெருமைச் சாத்தான் அவருக்குள் எட்டிப் பார்த்தான்.

‘நீர் கடவுளின் மகன் தானே. இங்கிருந்து கீழே குதித்தால் கூட உமக்கு ஒன்றும் நேராதே. குதிக்க வேண்டியது தானே ?’

‘நான் ஏன் குதிக்க வேண்டும் ? அதன் அவசியம் என்ன ?’

‘நீர் கடவுளின் மகன். நீர் குதித்தால் தேவ தூதர்கள் வந்து உமது கால் தரையில் படும் முன் தங்கள் கைகளினால் தாங்கிக் கொள்வார்களே. இது மறை நூலில் கூட எழுதப்பட்டிருக்கிறது. உமக்குத் தெரியாமல் இருக்காதே’

‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதியாதே என்று கூட எழுதியிருக்கிறதே. சோதனைப் பேயே மறைந்து போ’ இயேசு இரண்டாவது சோதனையையும் கடந்தார்.

அதன்பிறகு இயேசு மலையுச்சிக்குச் சென்றார். சுற்றிலும் பார்த்தார். இயற்கை மிகவும் அழகாக விரிந்து பரந்து கிடந்தது. சொகுசான மாட மாளிகைகள் அவருடைய கண்களுக்குத் தெரிந்தன. அவருக்குள் ஆசைப் பேய் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது.

‘ஏன் நீ கடவுளுக்கான பணிகளைச் செய்து உன் வாழ்க்கையை வீணடிக்க வேண்டும் ? பேசாமல் இந்த வளங்களையெல்லாம் அனுபவிக்கும் ஒரு பெரிய தலைவனாக மாறிவிடலாமே ? அல்லது அரசனாகி விடலாமே. எல்லா வளங்களும் உனக்கே. நீ நினைத்தால் இதெல்லாம் முடியும்’

‘கடவுளின் பணியே சிறந்தது’

‘எப்படி சொல்கிறாய் ? எத்தனையோ இறைவாக்கினர்கள் வந்தும் திருந்தாத மக்களா நீ சொல்லித் திருந்தப் போகிறார்கள். பேசாமல் கடவுள், போதனை இதையெல்லாம் விட்டு விட்டு ஆசையை அணைத்துக் கொள். மகிழ்ச்சியாக வாழ்’ சாத்தான் சொன்னான்.

‘போ.. அப்பாலே சாத்தானே. என்னைச் சோதிக்காதே. கடவுளை மட்டுமே வணங்கி அவரை மட்டுமே பணிந்திரு என்று சொல்லியிருக்கும் கட்டளைப்படிதான் வாழப் போகிறேன்’ இயேசு உறுதியாய் இருந்தார்.

உறுதியாய் இருக்கும் மனதை எந்த தீய எண்ணங்களும் திருடிக் கொள்வதில்லையே. இயேசுவும் மிகவும் உறுதியாக இருந்தார். தான் செய்யவேண்டிய பணிகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். தன்னுடைய மனதைத் தன்னுடைய கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் உறுதியும் கொண்டிருந்தார்.

சோதனைகள் இயேசுவின் மனதை விட்டு அகன்றன. இயேசு தெளிவடைந்தார். பணிவாழ்வுக்கான பக்குவத்தைப் பெற்றார். ஆசைகளையும், சோதனைகளையும் தாண்டி தன்னால் மக்கள் பணி செய்யமுடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...