Posted in Articles, கிறிஸ்தவம், Christianity, Desopakari

கிறிஸ்மஸ் மனுக்குலத்தின் மாபெரும் அருட்கொடை

Image result for christmas

*

கிறிஸ்மஸுக்கு என்னடா கிஃப்ட் ?
கிறிஸ்மஸ் தாண்டா மிகப்பெரிய கிஃப்ட் !

இந்த இரண்டு வரிகளும் சொல்கின்ற செய்தியை உள்வாங்கிக் கொண்டோமென்றால் இந்தக் கட்டுரையை விரிவாக எழுதத் தேவையில்லை. கிறிஸ்மஸ் என்பது தந்தையாம் கடவுள் இயேசுவை மீட்பின் பரிசாக நமக்கு அளித்தது தான். இதொன்றும் ஏனோ தானோவென்று கடவுள் எடுத்த முடிவல்ல. சத்திரங்கள் சாத்திக் கொண்டதால் வேறு வழியில்லாமல் தொழுவத்தைத் தஞ்சம் புகுந்தது எதேச்சையான நிகழ்வல்ல. சிலுவையின் உச்சியில் இயேசு நமக்காகப் பாவியானதும் பலியானதும் துரதிர்ஷமாய் நடந்ததல்ல. “சே.. பேட் லக்” என நாம் நினைப்பது போன்ற நிகழ்வு எதுவுமே இயேசுவின் வாழ்க்கையில் நடக்கவில்லை.

இயேசுவின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் தந்தையாம் இறைவன் உலகத் தோற்றத்துக்கு முன்பே எழுதி வைத்தவையே. இவற்றைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நமது சிந்தனைகளுக்கு நீள அகல ஆழம் இல்லை என்பது தான் உண்மை.

கிறிஸ்மஸ் என்றாலே பரிசுகள் வழங்கவேண்டுமென ஓடித் திரியும் போது, பரிசாய் வந்தவரை பல வேளைகளில் மறந்து விடுகிறோம். இதை விடப் பெரிய பரிசு கிடைக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். யாருக்கேனும் பரிசு கொடுக்க மறந்து விட்டால் தவித்து விடுகிறோம், யாரேனும் நமக்குப் பரிசு தராவிட்டால் கடுப்பாகி விடுகிறோம். இந்த கிறிஸ்மஸ் தினத்தில் நாம் மனதில் இருத்த வேண்டிய முதல் சிந்தனை. கிறிஸ்மஸுக்குப் பரிசு என்பதல்ல, கிறிஸ்மஸே பரிசு என்பது தான்.

கிறிஸ்மஸுக்கு மிக முக்கியமான இரண்டாவது விஷயம் சாப்பாடு. ஒருவருடமாக கூட்டில் வளர்த்து வருகின்ற கோழிகளின் கழுத்து வெட்டப்படும். அதிகாலையிலேயே மட்டன் கடைகளில் டோக்கன் கொடுக்குமளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும். ஹோட்டல்களிலும் ஸ்பெஷல் பிரியாணிகள் வாசனை நிரப்பும். கிறிஸ்மஸ் தினத்தில் நல்ல சாப்பாடு வாய்க்கவில்லையென்றால் அது ஒரு மிகப்பெரிய குறையாய் நமக்கு தெரியும்.

கிறிஸ்மஸுக்கு என்ன சாப்பாடு ?
கிறிஸ்து !

நானே வானிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு என்றார் இயேசு. நாம் பிரியாணி தேடும் அவசரத்தில் பிரியமானவரை பரிதவிக்க விட்டு விடுகிறோம். வாழ்வளிக்கும் உணவை விட்டு விட்டு வாய்க்கு சுவையளிக்கும் உணவின் பின்னால் அலைந்து திரிகிறோம். தமது உடலையே நமக்காய் தந்த இறைமகனை மறந்து விடுகிறோம். இந்த கிறிஸ்மஸ் தினத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய இரண்டாவது சிந்தனை. கிறிஸ்மஸுக்கு ஸ்பெஷல் உணவு என்ன ? கிறிஸ்து தான் ! என்பதே.

மூன்றாவதாக கிறிஸ்மஸ் நம்மை துரத்துவது ஆடை விஷயத்தில் தான். ஆடை வாங்குவதற்கான முன்னேற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே துவங்கி விடுவதும் உண்டு. சிலர் ஸ்பெஷலாக ஆடைகளை வடிவமைக்கவும் கொடுப்பார்கள். நண்பர்களென்றால் ஒரே மாதிரி ஆடை வேண்டும் என அடம்பிடிப்பார்கள். அடுத்த நபரின் ஆடைகளின் அழகையையும், தரத்தையும், நிறத்தையும், விலையையும் ஆய்வு செய்து செய்தே சர்ச் நேரம் முடிந்து விடும். அந்த அளவுக்கு மிக முக்கியமான விஷயமாய் இருக்கிறது ஆடை.

கிறிஸ்மஸுக்கு சிறந்த ஆடை எது ?
ம்ம்…கிறிஸ்து என்ன போர்த்தியிருந்தார் ?

தொழுவத்தில் பிறந்த இயேசுவைப் போர்த்தியிருந்தது பழைய கந்தை. மரியாவும், யோசேப்பும் பணக்காரர்களல்ல. அவர்கள் ஏழைகளின் பிரதிநிதிகள். அவர்களிடம் மழலை இயேசுவைப் போர்த்துவதற்குக் கூட ஒரு நல்ல துணி இருக்கவில்லை. கந்தை என்பது தமிழுக்காக எடுக்கப்பட்ட வார்த்தை தான். உண்மையில் அது வெட்டப்பட்ட துண்டு துணிகளை இணைத்து கயிறு போலக் கட்டி வைப்பது என்பது தான் எபிரேய விளக்கம். அதைக் கொண்டு தான் இயேசு போர்த்தப்பட்டார். அல்லது சுற்றிக் கட்டப்பட்டார்.

ஒரு சின்ன பரிசுப் பொருளைக் கொடுக்க வேண்டுமென்றால் கூட நாம் அதற்காக சூப்பர் “ரேப்பர்” வேண்டுமென கேட்டு ஒட்டுகிறோம். அதன் மேல் அழகான அலங்கார ரிப்பனையோ, அட்டையையோ ஒட்டுகிறோம். சாதாரணப் பரிசுக்கே அத்தனையெனில், உலகின் உச்சபட்சமான பரிசுக்கு என்ன வழங்கப்பட்டிருக்க வேண்டும் ? கந்தை ! அது தான் இறைவனின் தேர்வு. இறைவன் பார்வையில் எது விலைமதிப்பானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு இறைவனைப் போன்ற சிந்தை வேண்டும். இந்த கிறிஸ்மஸ் நாளில் மனதில் கொள்ள வேண்டிய மூன்றாவது சிந்தனை, ஆடை என்பது தேவைக்கானது, மேன்மைக்கானதல்ல.

கிறிஸ்மஸ் என்பது மனுக்குலத்துக்குக் கிடைத்திருக்கின்ற மாபெரும் பரிசு. இந்தப் பரிசு நமக்குச் சொல்லும் செய்திகள் என்னென்ன ?

1. அளிப்பவரின் பிரியமே, பரிசு.

எந்த ஒரு பரிசும் முதலில் வெளிப்படுத்துவது அந்தப் பரிசை அளிப்பவர் நம்மீது வைத்திருக்கின்ற அன்பு தான். அதுவும் நினையாத நேரத்தில் அளிக்கப்படுகின்ற பரிசுகள் அதீத பிரியத்தைப் பிரதிபலிக்கின்றன. பரிசுகள் கட்டாயத்தினாலோ, கடமைக்காகவோ அளிக்கப்படுவது பரிசுகளையே அவமானப்படுத்துகின்ற செயல். இயேசு இந்த உலகிற்கு பரிசாக வந்தது, தந்தையாம் இறைவனின் ஆழமான அன்பைப் பிரதிபலிக்கிறது. அந்தத் தந்தையின் அன்பை அப்படியே பிரதிபலிக்கும் பரிசுப் பொருளாக இயேசுவின் வாழ்க்கை இருந்தது. நமது பரிசுகள் உண்மையான நம் அன்பைப் பிரதிபலிக்கிறதா ?

2. பெற்றால் மட்டுமே, பரிசு.

பரிசைக் கொடுக்கலாம். எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. “உன் பரிசெல்லாம் எனக்கு வேண்டாம், என உதறிவிட்டுச் செல்லக் கூடிய ஏராளம் மக்கள் உண்டு”. யப்பா.. இலவசம் தான்பா என்று வலியுறுத்தினாலும் கூட, ‘உன் பரிசை நீயே வெச்சுக்கோ’ என சொல்லிவிட்டுக் கடந்து போகிறவர்கள் அநேகர். இயேசு எனும் பரிசையும் எத்தனையோ கோடி மக்கள் உதாசீனம் செய்து, நிராகரிக்கின்றனர். எனினும் பரிசுப் பொருள் திரும்பப்படவில்லை. விரும்பும் போது எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம், இறைமகன் இயேசு எனும் பரிசை உவகையோடு ஏற்றுக் கொள்கிறோமா ?

3. தகுதியைப் பார்க்காத, பரிசு

கிறிஸ்மஸின் ஆகச் சிறந்த மகிழ்ச்சிக்குக் காரணம், நாம் அந்தப் பரிசுக்குத் தகுதியற்றவர்கள் என்பதே. வாழ்வில் நிராகரிக்கப்பட்ட ஒருவரை அரவணைத்து ‘இதோ உலகின் மிகப்பெரிய பரிசு’ என கொடுப்பது எவ்வளவு இனிமையானது. பட்டினியின் அகோரப் பிடியில் இருப்பவனுக்கு லாட்டரி அடிப்பதைப் போன்ற அனுபவம் அது. நாம் தகுதியற்றவர்களாய் இருந்தபோதே, நாம் பாவிகளாய் இருந்த போதே இறைமகன் இயேசு எனும் மீட்பின் பரிசு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசை இதயத்தில் அமர வைக்க நம் மனதை சலவை செய்திருக்கிறோமா ?

4. ஆராய்ந்து அளிக்கப்படும், பரிசு

ஒருவருக்குப் பரிசு கொடுக்கவேண்டுமெனில் என்ன செய்வோம் ? முதலில் அந்த நபருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது ? எது அவருக்குப் பயனுள்ளதாக இருக்கும், எது பயனளிக்காது ? எது அவரிடம் இருக்கிறது, எது இருக்காது ? போன்ற பல விஷயங்களை அலசி ஆராய்வோம். பரிசைப் பெறப் போகும் நபருக்குத் தேவையானதையே நாம் பரிசாக கொடுப்போம். அல்லது பெறப் போகும் நபருக்கு மகிழ்ச்சியை அளிப்பதையே பரிசாகக் கொடுப்போம். கடவுளும் அப்படித் தான். உலக மக்களின் மகிழ்ச்சிக்காக இயேசு வழங்கப்படுகிறார். இயேசுவின் வருகை அவர் நமது பாவ வாழ்வை அறிந்ததன் வெளிப்பாடு. நமக்கு மீட்பு தேவை என்பதன் வெளிப்பாடு. அதை நாம் உணர்கிறோமா ? அந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொண்டோமா ?

5. நீண்டகாலப் பயனளிக்கும், பரிசு.

பரிசுகளின் விஷயத்தில் நாம் பார்க்கின்ற இன்னொரு விஷயம், “இது கொஞ்ச நாளாச்சும் நல்லா இருக்குமா ? ” என்பது தான். மிகவும் மலிவான, விரைவிலேயே நாசமாகின்ற பொருட்களை நாம் பிரியமானவர்களுக்குக் கொடுப்பதில்லை. நல்ல தரமானதாக இருக்க வேண்டும் என்றே ஆசிப்போம். இறைவன் தந்த பரிசு அந்தவகையில் எப்போதுமே அழியாதது. நிலைவாழ்வைத் தரக்கூடியது. நிலைவாழ்வைத் தருகின்ற வேறு எந்த பரிசும் நம்மிடம் இல்லை என்பதால் தான் இயேசு உன்னத பரிசாக மாறுகிறார். பரிசு நமக்கு நிலைவாழ்வைத் தரவிரும்புகிறது, நாம் அதை உணர்கிறோமா ?

இந்த கிறிஸ்மஸ் நாளில் உலகிற்கு அளிக்கப்பட்ட மாபெரும் பரிசான இறைமகன் இயேசுவை ஏற்றுக் கொள்வோம். அவரைப் பரிசாகத் தந்தவரின் அன்பை புரிந்து கொள்வோம். அந்தப் பரிசு நமக்குச் சொன்ன மனித நேயப் பணிகளை தொடர்ந்து செய்வோம். அந்தப் பரிசின் நோக்கமான நிலைவாழ்வை சொந்தமாக்கிக் கொள்வோம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்

*

சேவியர்

Desopakari

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...